ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை 2-1 என வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை 2-1 என வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி வங்காள தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் இந்தியா – மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் காலிறுதி நேரத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ராமன்தீப் கொடுத்த பந்தை எஸ்.வி. சுனில் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது காலிறுதி ஆட்டம் முடிவதற்கு சற்று முன் லலித் உபத்யாய் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

3-வது காலிறுதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

4-வது காலிறுதியில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று மலேசியா வீரர்கள் களம் இறங்கினார்கள். அதேவேளையில் கோல்கள் ஏதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என இந்தியா வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்கள்.

ஆனால் ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் மலேசியா ஒரு கோல் அடித்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் மேலும் கோல் ஏதும் விட்டுக்கொடுக்காத வகையில் அபாரமாக விளையாடினார்கள். மலேசிய வீரர்கள் கோல் கீப்பரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு வீரரை களம் இறக்கினார்கள். மலேசியாவின் இந்திய முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை. இதனால் இந்தியா 2-1 என மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியா ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2003 மற்றும் 2007-ல் ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியிருந்தது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.