அஷ்வினுக்கு கேப்டன் வாய்ப்பு பஞ்சாப் அணி பரிசீலனை
மொகாலி: ஐ.பி.எல்., 11வது சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தின் அஷ்வின் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. தவிர அணியின் பெயரும் மாற்றப்படவுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7 முதல் மே 27 வரை நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. தமிழக வீரர் அஷ்வின், கெய்ல், மில்லர் உள்ளிட்டோர், பஞ்சாப் அணியில் இடம் பிடித்தனர்.
பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா சக உரிமையாளராக உள்ள இந்த அணி, 2008ல் 3வது இடம், 2014ல் பைனல் வரை சென்றது. மற்றபடி, 8 தொடர்களிலும் லீக் சுற்றுடன் திரும்பியது. அணியின் சொந்தமண்ணாக உள்ள பஞ்சாப், மொகாலி கிரிக்கெட் சங்கத்திடம் இருந்தும், இந்த அணிக்கு போதிய ஆதரவு கிடைப்பது இல்லை என, கூறப்படுகிறது.
இதனால், வரும் சீசனில் இருந்து பஞ்சாப் அணியின் பெயர் மற்றும் சொந்தமண்ணை மாற்ற முடிவு செய்துள்ளனர். தொடர் துவங்கும் முன் இதற்கு அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.
கேப்டன் யார்
பஞ்சாப் அணியில் தற்போது அஷ்வின், யுவராஜ், லோகேஷ் ராகுல், பின்ச் (ஆஸி.,) என, நான்கு பேர் கேப்டன் போட்டியில் உள்ளனர். இதில் முழு நேர விக்கெட் கீப்பர், கேப்டனாக இருப்பார் என்ற எண்ணத்தில் தான் ராகுலுக்கு ரூ. 11 கோடி தரப்பட்டதாம். கடந்த சீசனில் தோள்பட்டை காயம் காரணமாக முழுமையாக விளையாடவில்லை. திடீர் திடீரென காயம் அடைந்து விடுவதால், அணிக்கு சிக்கல் தான்.
ஆஸ்திரேலிய ‘டுவென்டி-20’, பிக் பாஷ் தொடரில் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். இம்முறை பஞ்சாப் கேப்டனாகவும் நியமனம் ஆகலாம்.
அடுத்து தமிழகத்தின் அஷ்வின். சென்னை அணிக்காக 8 சீசனில் பங்கேற்றவர். டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவரை கேப்டனாக நியமிக்கவே ரூ. 7.6 கோடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தவிர, முதல் சீசனில் (2008) பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து, மீண்டும் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங்கும் இந்த போட்டியில் உள்ளாராம்.
பெயர் மற்றும் இடமாற்றம், புதிய கேப்டன் போன்றவை பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருமா என, பொறுத்திருந்து பார்ப்போம்