மற்ற பேட்ஸ்மேன்களை வைத்து விராட் கோலியை அவுட் ஆக்குவோம்: இங்கிலாந்து பயிற்சியாளர் இறுமாப்பு

இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் மூலம் விராட் கோலியை நெருக்கடிக்கு உள்ளாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்களை வைத்தே கோலியை முறியடிப்போம்- இங்கிலாந்து பயிற்சியாளர்.  இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றியை நெருங்கியது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். விராட் கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் சேர்த்தார்கள்.

விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடுவதால், இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் விராட் கோலியை நெருக்கடிக்கு உள்ளாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரெவர் பெய்லிஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இல்லை. அந்த நிலையை நெருங்கி வருகிறார். முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி விளையாடியது உயர்தர ஆட்டம். இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தால், அது விராட் கோலியிடம் சென்று அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும்.’’ என்றார்.

 

முதல் டெஸ்ட்டின் இரு அணிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் லெக் சைட், ஆப் சைட், மிட் ஆப் என அனைத்துப் பகுதிகளிலும் விக்கெட்டுகளை வீரர்கள் இழந்தார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அசராமல் பேட் செய்தவர் கோலி. இந்தப் பந்துவீச்சில் பேட் செய்வது கடினம் எனத் தெரிந்தும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு, பந்து வருவதற்கு முன்கூட்டியே பேட்டைக் கொண்டு சென்று தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்கள். அதுபோன்ற தவறைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறோம்.

அஸ்வினின் வலது கை சுழற்பந்துவீச்சை சமாளிக்கத் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் டேவிட் மலானை நீக்கிவிட்டு ஆலிவர் போப்பை 2-வது டெஸ்ட் போட்டியில் சேர்த்திருக்கிறோம்.

வழக்கு தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் சென்றுள்ளார் என்பதால், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வோஸ் சிறந்த ஆல்ரவுண்டர், வேகப்பந்துவீச்சாளர். வலைப்பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசிவிட்டு, களைப்படையாமல், டி20 போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்தவர் வோக்ஸ்.

இங்கிலாந்து, இந்திய அணிக்கு ஒரேமாதிரியான பிரச்சினைதான் இருக்கிறது. ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் சரிவர கேட்ச்களைப் பிடிப்பதில்லை. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், இந்திய அணியில் ஷிகர் தவண், ரஹானே ஆகியோரும் கேட்சுகளைத்  தவறவிட்டனர். இதையும் வரும் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியை 2-வது போட்டியிலும் வீழ்த்த பல்வேறு யுத்திகளோடு களமிறங்குவோம்.”

இவ்வாறு பேலிசிஸிஸ் தெரிவித்தார்.

Editor:

This website uses cookies.