இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த ஊதியத்தை வழங்க பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இறுதியாக ஒப்புதல் வழங்கியது.
உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ நிர்வாகத்தை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏ கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி கிரிக்கெட் வீரர்களின் திருத்தப்பட்ட ஊதியத்தை அறிவித்தது. ஆனால் இதற்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும் எனக்கூறி கையெழுத்திட தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி மறுத்து வந்தார்.
இதனால் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. மேலும் வரும் ஜூலை மாதம் அயர்லாந்து, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதிலும் சிஓஏ அமைப்புக்கு கருத்து வேறுபாடு இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமை பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இதில் 28 மாநில சங்கங்கள் பங்கேற்றன. அனைத்து தீர்மானங்களுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தின்படி ஏ பிளஸ் வீரருக்கு ரூ.7 கோடி, ஏ பிரிவு வீரருக்கு ரூ.5 கோடி, பி பிரிவு வீரருக்கு ரூ.3 கோடி, சி பிரிவு வீரருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும்.
பெண் வீராங்கனைகள் உள்பட உள்ளூர் வீரர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. உத்தரகண்ட், பிகார், வடகிழக்கு மாநிலங்கள் வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட சிஓஏ வழங்கிய அனுமதிக்கு சிறப்பு பொதுக்கூட்டம் ஒப்புதல் தரவில்லை.
இதுதொடர்பாக பிசிசிஐ தற்காலிக செயலர் அமிதாப் செளத்ரி கூறியதாவது: சிறப்பு பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை. பிசிசிஐ நிர்வாகிகள், சிஓஏ நிர்வாகிகள் இருவரும் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சிஓஏ மேற்பார்வையின் கீழ் நாங்கள் பணிபுரிவோம்.
சிஓஏ நிர்வாகி வினோத் ராய் கூறுகையில்: பிசிசிஐ ஊழல் தடுப்பு அமைப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் சிங் கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பணிபுரிந்தார். அவரது நியமனத்தை கிடப்பில் வைப்பதை ஏற்க முடியாது. உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது. எங்களுக்கு வீரர்கள் நலனே முக்கியம். அவர்கள் ஒப்பந்த ஊதியத்துக்கு ஒப்புதல் தராமல் இருந்தால், நாங்கள் தந்திருப்போம் என்றார்.