இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்..?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்குழுவான ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத மே.இ.தீவுகள் தொடருடன் ரவிசாஸ்திரி ஒப்பந்தம் நிறைவடைகிறது.
மே.இ.தீவுகள் தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் இவர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர்களாக மீண்டும் பிசிசிஐ-யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மே.இ.தீவுகள் தொடருக்குப் பிறகு இந்திய உள்நாட்டு சர்வதேச தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது.
அனில் கும்ப்ளேயை விராட் கோலி தினமும் பிசிசிஐ-யை நச்சரித்து விலகச் செய்ததையடுத்து கோலியின் பரிந்துரையின் பேரில் ரவிசாஸ்திரி கடந்த 2017-ம் ஆண்டு தலைமைப் பயிற்சியாளரானார். ஆஸ்திரேலியாவில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றது ரவிசாஸ்திரி பயிற்சிக்காலத்தில்தான், இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இந்திய அணி சில வெற்றிகளை இவரது பயிற்சியின் கீழ் பெற்றாலும் இங்கிலாந்துக்கு எதிராக அங்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கும் ஒருநாள் தொடரில் தோல்வி தழுவியது. டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி உதைகளை வாங்கியது.
மேலும், இவர் கோலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடப்பதாகவும் அணியில் இளைஞர்களைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனங்களும் இந்திய அணியின் ஆகப்பலவீனமான மிடில் ஆர்டர் நிலைமைகளுக்கு ரவிசாஸ்திரி, கோலி, தோனி கூட்டணிதான் காரணம் எனவும் விமர்சனங்கள் ஆங்காங்கே பரவலாக எழுந்தன. இதனையடுத்து இந்தப் பதவிக்காலத்திற்குப் பிறகு கோலியின் ஆதரவு இருந்தாலும் ரவிசாஸ்திரி நீடிப்பது கடினம் என்று தெரிகிறது.
முன்னாள் தமிழ்நாடு கேப்டன் சுனில் சுப்ரமணியன் அணி மேலாளராக பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு இன்னும் ஒரிருநாளில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.