12 வருசம் நாங்க காத்திருந்தது வீணாகல… பாகிஸ்தான் அணியுடனான வரலாற்று வெற்றி குறித்து பேசிய முகமது நபி
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது 12 வருட கனவு நிறைவேறி விட்டதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது நபி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்களும், சஃபிக் 58 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் முதல் நான்கு வீரர்களும் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 49வது ஓவரில் இலக்கை எட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாறும் படைத்தது.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது நபி, உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்ற தங்களது 12 வருட கனவு நிறைவேறிவிட்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகமது நபி பேசுகையில், “பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றி எங்கள் அணிக்கு மட்டும் இல்லாமல் மொத்த ஆஃப்கானிஸ்தானிற்குமே வரலாற்று சிறப்புமிக்கது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்ற எங்களது 12 வருட கனவு இன்று நிறைவேறிவிட்டது. உலகக்கோப்பை தொடருக்காக நாங்கள் கடந்த மூன்று மாதமாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம், அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணியால் சேஸிங்கும் செய்ய முடியும் என்பதை இந்த போட்டியின் மூலம் உறுதிபடுத்தியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்தனர். வங்கதேச அணியுடனான முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருக்க கூடாது, இருந்தாலும் தற்போது நான்கு புள்ளிகள் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை ரசிகர்கள் எங்களுக்கு அதிகமான ஆதரவையும், அன்பையும் அளித்தனர். இலங்கை அணியுடனான அடுத்த போட்டியிலும் இதே போன்று சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.