தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 227/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 230/4 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
ஏற்கெனவே 2 தோல்விகளால் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் இந்திய அணி எந்த அழுத்தமும் இல்லாமல் முதல் ஆட்டத்தில் பங்கேற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளலில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பமே பேரதிர்ச்சி: தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஷிம் ஆம்லாவை 6 ரன்களுக்கும், குவின்டன் டி காக்கை 10 ரன்களுக்கு அவுட்டாக்கினார் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
அதன் பின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ், ராகி வேன்டர் டுஸன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். 10-ஆவது ஓவரின் போது ஸ்கோர் 34/2 ஆக இருந்தது.
சஹல் சுழலால் சிக்கல்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹலின் அபார பந்து வீச்சால் டூபிளெஸ்ஸிஸ் 38 ரன்களுக்கும், வேன்டர் டுஸன் 31 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 31 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பால் டுமினியும் வெறும் 3 ரன்களோடு, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார். 25-ஆவது ஓவரின் போது ஸ்கோர் 100-ஐ கடந்தது.
அதன் பின் நிதானமாக ஆடி ரன்கள் எண்ணிக்கையை பெலுக்வயோ உயர்த்தினார். 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 34 ரன்களை எடுத்த அவர், சஹல் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களையே எடுத்திருந்தது தென்னாப்பிரிககா.
கிறிஸ் மோரிஸ்-ரபாடா அபாரம்: பின்னர் கிறிஸ் மோரிஸ்-ககிúஸா ரபாடா இணைந்து 8-ஆவது விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்தனர். 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 42 ரன்களுடன் மோரிஸ், புவனேஸ்வர் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே இம்ரான் தாஹிர் ரன் ஏதும் எடுக்காமல், புவனேஸ்வர் பந்தில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா.
228 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ஷிகர் தவன்-ரோஹித் சர்மா களமிறங்கினர். எனினும் 8 ரன்கள் எடுத்த நிலையில் தவன், ரபாடா பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
பின்னர் ரோஹித்-கேப்டன் கோலி இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து. கோலி 18 ரன்களை எடுத்திருந்த நிலையில், பெலுக்வயோ பந்தில், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது 54/2 ரன்களை சேர்த்திருந்தது இந்தியா.
சரிவுக்குள்ளான இந்திய அணியை ரோஹித்-ராகுல் இணை பொறுப்பாக ஆடி மீட்டது.
ராகுல் அடித்த பவுண்டரியில் 26-ஆவது ஓவரில் ஸ்கோர் 100-ஐ கடந்தது. 42 பந்துகளில் 26 ரன்களை சேர்த்திருந்த ராகுல், ரபாடா பந்துவீச்சில் டு பிளெஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் தோனியும்-ரோஹித்தும் இணைந்து ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.
35 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.
ரோஹித் 23-ஆவது சதம்: ரோஹித் சர்மாவும்-தோனியும் இணைந்து பொறுப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரோஹித் சிறப்பாகஆடி தனது 23-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
34 ரன்கள் எடுத்த தோனி, கிறிஸ்மோரிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஆட்டத்தை நிறைவு செய்தார் பாண்டியா: அவருக்கு பின் வந்த ஹார்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 230 ரன்களை குவித்தது இந்தியா.
இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
ரோஹித் சர்மா 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 122 ரன்களுடனும், ஹார்திக் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 2-39 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா பெறும் 3-ஆவது தொடர் தோல்வி இதுவாகும்.