சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மொய்ன் அலி, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் 26ம் தேதி துவங்கி மேத மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த தொடரை துவங்க வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் மொய்ன் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “மொய்ன் அலி திங்கள்கிழமையே மும்பை வந்தடைவார் என எதிர்பார்த்தோம், ஆனால் அவருக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. மொய்ன் அலி எப்போது மும்பை வருவார் என்பது எங்களுக்கே சரியாக தெரியவில்லை. மொய்ன் அலி, தனக்கான விசாவை பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் பிப்ரவரி மாதம் 28ம் தேதியே ஒப்படைத்துவிட்டார். இருந்தபோதிலும் அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் புதன்கிழமை வந்தாலும், கொரோனா விதிமுறை காரணமாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மொய்ன் அலி விளையாட வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த மொய்ன் அலி, கடந்த வருட தொடரில் விளையாடிய 15 போட்டிகளில் 357 ரன்கள் குவித்ததோடு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட தொடருக்கான தனது அணியில் மொய்ன் அலியை மூன்றாவது வீரராக தக்க வைத்தது.
காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது மொய்ன் அலியும் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.