டிஎன்பிஎல், சேப்பாக் சாம்பியன்

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடிய எந்த போட்டிகளிலும் தோற்காமல் வெற்றி வாகை சூடிய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடன் விளையாடிய போட்டிகளில் ஒருமுறை மட்டுமே தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் எம்ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டன.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் கோப்பையை தட்டிச் செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

டாசில் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தரும் கவுசிக் காந்தியும் களமிறங்கினர்.

12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  சதீஸ் பந்துவீச்சில் சாய் கிஷோரிடம் கேட்ச் வாஷிங்டன் சுந்தர் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு கவுசிக் காந்தியோடு முகுந்த் களமிறங்கினார். 19 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அபினவ் முகுந்த் வெளியேற அடுத்தடுத்து இறங்கிய ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 8விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கணேஷ் மூர்த்தி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சேப்பாக் கில்லீஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர், அருண் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது இன்னிங்சைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே கோபிநாத் அதிரடி காட்ட தலைவன் சற்குணம் நிதானத்தை கடைபிடித்தார். 31 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தலைவன் சற்குணம், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் பந்துவீச்சில் கவுசிக் காந்தியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தின் 14 ஓவரின் இறுதியில் கோபிநாத் தனது அரைசதத்தை பதிவு செய்ததோடு அடுத்த ஓவரின் மூன்றாவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் சதீஸ், சரவணன் இணை களமிறங்கி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

18வது ஓவரில் சரவணன் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 19 ஓவர்களில் 4விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கோப்பையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தட்டிச்சென்றது.

சதீஸ், சரவணன் ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணித் தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

10 பந்துகளில் 23 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்த சத்திய மூர்த்தி சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களோடு 459 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய  டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Editor:

This website uses cookies.