தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான டு பிளிசிஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 23 வயதான மார்கிராம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்து, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் சதம் அடித்தார்.
போட்டியின்போது டு பிளிசிஸின் கை விரலில் அடிப்பட்டது. போட்டி முடிந்த பின்னர் பேசிய டு பிளிஸ்சிஸ் ‘‘அடுத்த போட்டிக்குள் காயம் சரியாகிவிடும். எனவே அடுத்த போட்டியில் விளையாடுவேன்’’ எனக் கூறியிருந்தார். ஆனால் அந்த காயம் வீரியம் உடையதாக இருந்தது. காயம் முழுவதும் குணமடைய இன்னும் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு எதிரான எஞ்சியுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து டு பிளிஸ்சிஸ் விலகியுள்ளார்.
ஏற்கனவே, முதல் மூன்று போட்டியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியுள்ளதால் கேப்டன் பொறுப்பை யாரிடம் வழங்கலாம் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் யோசித்தது. இந்நிலையில் 23 வயதே ஆன எய்டன் மார்கிராம் அடுத்த இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆனால் 23 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா ஜூனியர் உலகக்கோப்பையை வெல்லும்போது மார்கிராம் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.