கொஞ்சம் கஷ்டம் தான்… ஆனா அவ்வளவு ஈசியா விட்ற மாட்டோம்; டூவைன் பிராவோ உறுதி !!

சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் போராடும் என சென்னை அணியின் சீனியர் வீரரான டூவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

15வது ஐபிஎல் சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (26-3-22) துவங்கியது. மே மாத இறுதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த தொடருக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டதால், கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே புதிய வீரர்களுடன் இந்த தொடரை எதிர்கொள்ள உள்ளது. இதனால் இந்த தொடர் அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விதிவிலக்கு அல்ல, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இந்த தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

வழக்கத்திற்கு மாறாக இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், எப்படிப்பட்ட வீரர்களாக இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தி தோனி இந்த முறையும் சென்னை அணிக்கு கோப்பையை பெற்று கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தோனி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் இந்த திடீர் முடிவும் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவதால், இந்த தொடரை சென்னை அணி எப்படி எதிர்கொள்கிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் வீரரான டூவைன் பிராவோ, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள சென்னை அணி கடுமையாக போராடும் என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பிராவோ பேசுகையில், “சாம்பியன் பட்டம் வெல்வது இலகுவானது, ஆனால் அதை தக்க வைத்து கொள்வது மிக கடினமானது. ஐபிஎல் தொடர் தான் உலகின் அதிக சவால் நிறைந்த டி.20 தொடர். ஒவ்வொரு முறையும் நாங்கள் கோப்பையை வென்ற போது, அதை மீண்டும் தக்க வைத்து கொள்ள கடுமையாக போராடியுள்ளோம், இந்த முறையும் அதுவே நடக்கும். இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களும் உள்ளனர், அனுபவ வீரர்களும் உள்ளனர். எங்களால் முடிந்தவரை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ள கடுமையாக போராடுவோம், ஆனால் மிக இலகுவாக இது நடந்துவிடாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.