4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் சிட்னி ஆடுகளம் முதல் இரண்டு நாட்களுக்கு புற்கள் நிறைந்ததாகவும் நாட்கள் செல்லச்செல்ல கணிக்க முடியாத அளவிற்கு மாறிவிடும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
1947-48 முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஆடி வருகிறது. இதில் 1980-81, 1985-86, 2003-04 ஆகிய தொடர்களை இழக்காமல் ட்ரா செய்தது இந்திய அணி. ஆனால் 1967-68, 1977-78 (இது மிகவும் நெருக்கமாக ஆடப்பட்ட தொடர்), 1991-92, 199-2000, 2007-08, 2011-12, 2014-15 என்று உதை மேல் உதை வாங்கியதுதான் நடந்துள்ளது.
ஆகவே விராட் கோலி தன் தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை இடம்பெறச் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.
இந்திய அணிக்குப் பின்னடைவாக ஸ்பின் எடுக்கும் என்ற சிட்னி பிட்சில் அஸ்வின் ஆட முடியாமல் போயிருப்பது மற்றும் அருமையாக வீசிவரும் இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஆட முடியாமல் போயிருப்பதும் ஆகும். ஆனால் குல்தீப் யாதவ்வை 13 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்துள்ளனர். இஷாந்த் சர்மாவுக்குப் பதில் உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார், சிட்னி பிட்ச் இவரது பந்து வீச்சுக்கு தோதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ரோஹித் சர்மா இல்லாததால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுலை எடுத்துள்ளனர். பார்த்திவ் படேலுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். ஆனால் ராகுல் தொடக்கத்தில் இறங்கி ஹனுமா விஹாரி தன் வழக்கமான டவுனுக்கு வருவாரா, அல்லது ராகுலுக்கு இன்னொரு டவுன் ஆர்டர் வழங்கும் முகமாக ரோஹித் சர்மா டவுனில் இறங்குகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியாவை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை, இஷாந்த் சர்மாவுக்குப் பதில் அவரை எடுத்திருக்கலாம், அப்படி எடுத்தால் ராகுல் தேவையில்லை, குல்தீப் யாதவ்வை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் ஹர்திக் பாண்டியா வலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கடுமையாக பயிற்சி மேற்கொண்டது அவரை ஏதோ நாளை களமிறக்கி விடுவார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் வீரர்கள் தேர்வில் அவர்களுக்கு தெரிவுகள் அதிகமில்லை, இயன் சாப்பல் கூறியது போல் இப்போது இருக்கு வீரர்களுகுப் பதிலாக ஷீல்ட் அணிகளிலிருந்து புதிய வீரர்களைக் களமிறக்கும் வாய்ப்பும் குறைவுதான் ஏனெனில் அவர்கள் சராசரியும் 30-35தான். ஆகவே ஏரோன் பிஞ்ச், மார்ஷ் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் லாபுஷேன் அணிக்கு வருகிறார். பிஞ்ச் இல்லையெனில் உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸுடன் இறங்குவார். மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் களமிறக்கப்படுகிறார்.
இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சதங்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி வீரர்களில் ஒருவரும் ஒரு சதம் கூட இந்தத் தொடரில் எடுக்க முடியவில்லை.
பிட்ச்:
இந்தப் போட்டியில் பெர்த், மெல்போர்ன் அளவுக்கு பிட்ச் பற்றி பேச்சு இல்லை என்றாலும், டிம் பெய்ன் ஆஸ்திரேலிய பிட்ச் தயாரிப்பாளர்கள் உள்நாட்டு அணிக்கு சாதகம் செய்யவில்லை என்று சாடியதும் நினைவு கூரத்தக்கது. ஆனால் பிட்ச் தயாரிப்பாளர் ஜஸ்டின் குரோவ்ஸ், பிட்சில் அனைவருக்கும் சாதகம் இருக்கும். முதல் நாளில் கொஞ்சம் ஸ்விங், நல்ல பேட்டிங் ஆடினால் ரன் எடுக்கலாம். பிற்பாடு ஸ்பின் எடுக்கும் என்று கூறியுள்ளார்.
புள்ளி விவரங்கள்:
கபில்தேவ் மட்டுமே ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் (25 விக்கெட்டுகள், 1991-92), ஆனால் பும்ரா 3 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கபில் சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு நல்ல வாய்ப்பு.
ஆட்டம் நாளை காலை 5 மணிக்குத் தொடக்கம்