சவுத் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தனது அசுர வேகத்தால் உலகின் தலை சிறந்த வீரர்களின் விக்கெட்டுகளையும் எளிதாக கைப்பற்றிய டேல் ஸ்டைன் கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் கிரிக்கெட் சம்பந்தமான கருத்துகளை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போதும் அதிகமாக பேசி வரும் டேல் ஸ்டெயின் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் சமகால கிரிக்கெட்டில் எந்த வீரருக்கு பந்துவீசுவது கடினம் என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ஸ்டைன் இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கேஎல் ராகுல் தான் தற்கால கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சு சவாலாக இருக்கக்கூடிய வீரர் என்று பதிலளித்தார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 48 பந்துகளில் 132 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் அந்த போட்டியின் இறுதி ஓவரை வீசிய பொழுது அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் அடித்து அசத்தினார் அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.
மேலும் 2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே எல் ராகுல் அதிரடியாக பேட்டிங் செய்து அதிகமான ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். துபாய் மைதானத்தில் மிக சிறப்பாக விளையாடிதன் காரணமாக 2021 உலக கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் முதலில் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 3,18 என சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கேஎல் ராகுல் நமீபியா ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.