என்னை மனிதனாக மாற்றியதே எனது மகள் தான்; தோனி !!

என்னை மனிதனாக மாற்றியதே எனது மகள் தான்; தோனி

தன்னை ஒரு மனிதனாக மாற்றியதே தனது மகள் தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஐபிஎல் போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3-வது முறையாக கேப்டன் தோனி கோப்பையை வென்று கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். அதைக் காட்டிலும் மிக முக்கியமான விஷயம், ஐபிஎல் போட்டி முழுவதும் தனது மகள் ஜிவாவை உடன் வைத்திருந்தது, அவருடன் மைதானத்தில் ஓடி விளையாடியது, நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட்டது, ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது போன்றவை தோனிக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

ஜிவா பிறந்தபின், தனது வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு தோனி பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தோனி கூறியதாவது:

”என் மகள் ஜிவா பிறந்த பின் கிரிக்கெட் வீரராக இருந்த நான் மாறி இருக்கிறேனா என எனக்குத் தெரியாது. ஆனால், தனி மனிதர் என்ற முறையில் என்னை என் மகள் மனிதராக மாற்றிவிட்டாள். ஏனென்றால், அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் எப்போதும் நெருக்கும் அதிகம்.

என்னைப் பொறுத்தவரை ஜிவா பிறந்தபோது, நான் அவளுடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை. ஏறக்குறைய 3 ஆண்டுகள் நான் கிரிக்கெட் விளையாடுவதிலேயே மும்முரமாக இருந்துவிட்டேன். எல்லாம் கிரிக்கெட்டிலேயே கவனம் செலுத்தியதால், தந்தையாக நான் பல விஷயங்களை நான் இழந்துவிட்டேன்.

என்னுடன் எனது மகள் ஜிவா நெருக்கமாக இல்லாததால், ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்து பயப்படத் தொடங்கிவிட்டார். ஜிவா சாப்பிட அடம்பிடித்தால்கூட அப்பாவைக் கூப்பிடவா என் பெயரைக் கூறினால் பயந்துவிடுவாள், ஏதாவது குறும்பு செய்தால், அப்பாவிடம் சொல்லவா என்று யாராவது கூறினால் பயந்துவிடுவாள். என்னைப் பார்த்தாலே, ஜிவா பயந்து பின்னால் நகர்ந்துகொள்வாள். இதைக் கண்டு வேதனையாக இருந்தது. ஒரு தந்தையாக என்னால் அவளுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை என வருத்தமடைந்தேன்.

ஆனால், ஐபிஎல் போட்டி முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜிவாவுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு மணித்துளியும் மிகச்சிறப்பாக அமைந்தது.நான் ஐபிஎல் நிர்வாகத்திடம் முன்வைத்த ஒரே வேண்டுகோள், என் மகள் ஜிவாவை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அனுமதியும் கிடைத்தது. அணியில் உள்ள வீரர்களின் குழந்தைகள் ஜிவாவுடன் இணைந்து கொண்டனர்.

நான் நண்பகல் 1.30,2.30,3 மணிக்குப் பயிற்சிக்காக எழும்போதெல்லாம் ஜிவாவும் எழுந்துவிடுவாள். காலை உணவுக்கு 8.30 அல்லது 9 மணிக்குத்தான் எழுந்திருப்பாள். ஒவ்வொரு வீரருடனும் மகிழ்ச்சியாகப் பழகி, விளையாடத் தொடங்குவாள். வீரர்கள் ஒவ்வொருவரின் குழந்தைகளும் ஒன்றாகச்சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

ஜிவா கிரிக்கெட் விளையாட்டை எந்த அளவுக்குப் பார்க்கிறாள், புரிந்து கொள்கிறாள் என எனக்குத் தெரியாது. ஆனால், ஒருநாள் போட்டி முடிந்த பரிசளிப்பு விழாவுக்கு அழைத்துச் சென்றபோது, நெறியாளர் கிரிக்கெட் குறித்துக் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஜிவா சரியாக பதில்அளித்தது வியப்பாக இருந்தது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.