வீடியோ: “எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணுங்க!” – சென்னை ரசிகர்களிடம் உதவி கேட்ட வார்னர்!

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை வந்த டேவிட் வார்னர் தனிமைப்படுத்துதலில் இருக்கும்பொழுது தனிமையை உணராமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற வகையில் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக உதவியை கோரியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி மே 20ஆம் தேதி வரை என கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வீரர்கள் இந்தியா வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனிமைப்படுத்துதல் வரைமுறை காரணமாக பல வீரர்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் இதனை பொருட்படுத்தாது இன்னும் பல முக்கியமான வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தார். ஹோட்டலில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இவர், ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏழு நாட்களை எப்படி கடக்கப்போகிறோம்; எந்தவித மன அழுத்தமும் வந்து விடக்கூடாது என்கிற வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, “நேற்று மதியம் சென்னை வந்தடைந்த நான், நீண்ட நேரம் உறக்கம் எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு தற்போது எழுந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அறிவுறுத்தலின்படி, 6 முதல் 7 நாட்கள் வரை நான் தனிமையில் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நான் எந்தவிதமான இறுக்கத்தையும் உணராமல் இருக்க, ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு, என்ன செய்யலாம்? என யோசனை சொல்லுங்கள். அது வேடிக்கையானதாக இருக்கலாம், படங்களாக இருக்கலாம், நிகழ்ச்சிகளாக இருக்கலாம். ஏதாவது ஒன்றை நீங்கள் எனக்கு கூறுங்கள். அதிலிருந்து நான் எனக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறேன். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்ய வேண்டும். அதற்கு நன்றி!” என தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக ரன் குவித்த வெளிநாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார். ஹைதராபாத் அணிக்கு கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கடந்த ஆறு சீசன்களாக தொடர்ந்து 500 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

இவருடன் மற்ற ஹைதராபாத் அணி வீரர்களும் ஹோட்டலில் தனி அறைகளில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆறு நாட்களுக்குப் பிறகு இவர்களால் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்ப இயலும் என்கிற விதிமுறையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹைதராபாத் அணி ஏப்ரல் 11ஆம் தேதி முதல் போட்டியில்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.