டெல்லி பேட்ஸ்மேன்களை பொட்டலம்கட்டிய ஷமி, ரஷித் கான்… கடைசி வரை போராடிய அக்ஸர் பட்டேல்! – குஜராத் அணிக்கு சிக்கலான இலக்கு!

ஷமி, ரஷித் கான் அபார பந்துவீச்சால், 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஏழாவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் டெல்லி கேப்பிடல்ஸ் சனிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷா(7) மற்றும் மிச்சல் மார்ஸ்(4) இருவரின் விக்கெட்டை தூக்கி அழுத்தம் கொடுத்தார் முகமது சமி. அதன் பின்னர் அல்சாரி ஜோசப் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி மேலும் அழுத்தத்தை டெல்லி அணிக்கு கொடுத்தார்.

நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 37 ரன்களுக்கு அவுட் ஆனார். மிடில் ஆர்டரில் சிறிது நேரம் போராடிய சர்ப்ராஸ் கான் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தடுமாறியபோது, உள்ளே வந்த அக்சர் பட்டேல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை 150+ ரன்களுக்கு உயர்த்தினார்.

மிடில் ஓவர்களில் ரஷித் கான் மற்றுமொரு முறை தாக்குதலை நடத்தி ரன்களை கட்டுக்கோப்பில் வைத்துக்கொண்டார். போட்டியின் கடைசி ஓவர் வரை போராடி வந்த அக்சர் பட்டேல் 22 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.

முதல்முறையாக ஐபிஎல் போட்டிக்கு அறிமுகமான இளம் வீரர் அபிஷேக் போரல், நன்றாக விளையாடி இரண்டு சிக்ஸர்கள் உட்பட 11 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது.

குஜராத் அணிக்கு அபாரமாக பந்து வீசிய முகமது சமி மற்றும் ரஷித் கான் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

163 ரன்கள் இலக்கை கடந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுமா? அல்லது இந்த ஸ்கோரை கட்டுப்படுத்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் பெறுமா? என்பதை பொறுத்திருப்போம்.

Mohamed:

This website uses cookies.