இறுதி போட்டிக்கு முன் வீரர்கள் கூறியது என்ன..? உண்மையை உடைத்த தல தோனி
ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னதாக வீரர்களுடனான கூட்டம் எப்படி இருந்தது என்ற தகவலை தோனி கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் இந்த ஆண்டு களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை அணியில் வயதான வீரர்களாக இருக்கின்றனர் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தோனி, வாட்சன், ஹர்பஜன் சிங், பிராவோ ஆகிய அனைவரும் சிறப்பாகவே ஆடினர். அதிலும் இறுதி போட்டியில் வாட்சனின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதிரடியில் எதிரணியை மிரட்டினார் வாட்சன்.
சென்னை அணி கேப்டன் தோனி, கேப்டன் கூல் என்ற பெயர் பெற்றவர். எந்த சூழலிலும் பதற்றப்படாமல் அணியை கூலாக வழிநடத்தி வெற்றியை வசப்படுத்துபவர். இந்த சீசனிலும் பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் வீரர்கள் அவ்வப்போது சொதப்பினாலும், அவர்களை ஊக்குவித்து அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை பெற்றார்.
தோனி என்ற சிறந்த கேப்டனையும் பிளெமிங் என்ற சிறந்த பயிற்சியாளரையும் பெற்றிருப்பது, சென்னை அணி ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம்.
ஐபிஎல் இறுதி போட்டியில் முதலிரண்டு இடங்களில் இடந்த ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆடுவதற்கு முன்னர் வீரர்களிடம் வெகுநேரம் தோனியும் பயிற்சியாளர் பிளெமிங்கும் பேசியிருப்பர் என நினைக்கலாம். ஆனால் நடந்தது அதுவல்ல என தோனி தெரிவித்திருக்கிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தோனி, சீசன் தொடங்கியதிலிருந்து ஒரு அணியாக விளையாடி வருகிறோம். அதனால் வீரர்களின் பங்களிப்பும் பொறுப்பும் தெளிவாக இருந்தது. எனவே டென்ஷனாக இல்லாமல் நிதானமான மனநிலையுடன் சாதாரணமாகவே இருந்தோம். அதனால், ஆலோசனைகள் தேவைப்பட்டால் கூறலாமே தவிர கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களை கூட்டி ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்று அவசியமில்லை. போட்டிக்கு முன்னர் எங்கள் அணியின் கூட்டம் 5 நொடிகள் கூட நடந்திருக்காது.
போய், கோப்பையை வென்று வாருங்கள் பாய்ஸ் என்று பிளெமிங் கூறினார். அவ்வளவுதான் எங்கள் அணியின் கூட்டம் என்று தோனி கூறியுள்ளார்.