இந்தியாவுக்காக இனி எம்.எஸ். தோனி ஆடமாட்டார் என்று ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கரோனா லாக் டவுனினால் இந்திய முன்னாள் இந்நாள் வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பிஸியாக உள்ளனர். ஒருவிதத்தில் நடிகர், நடிகைகளுக்கும் விளையாட்டு வீரர்களும் ஒன்றுதான் எப்போதும் கரகோஷம், ரசிகர்களின் ஆரவாரம், மீடியா வெளிச்சம், பிரபலத்தன்மையுடன் வாழ்ந்து வாழ்ந்து சாதாரணமாக அமைதியாக, மறைந்து வாழும் தன்மை அவர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது, அதனால் சமூக ஊடகங்களில் வந்து எதையாவது சொல்வது என்பது இவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்தான் இன்ஸ்டாகிராம் லைவ் செஷன் ஒன்றில் ரோஹித் சர்மா, ஹர்பஜனிடம் ஒருவர் தோனி எப்போது களம் புகுவார் என்று கேள்வி எழுப்ப, ரோஹித் சர்மா அதற்கு, “நீங்களே தோனியிடம் கேளுங்களேன். அவர் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று பதிலளித்தார்.
மாறாக ஹர்பஜன் சிங் கூறும்போது, ‘நீங்கள் இந்தியாவுக்கு தோனி ஆடுவாரா மாட்டாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள், அவர் இனி இந்தியாவுக்காக ஆடமாட்டார் என்றே நான் கருதுகிறேன். இந்தியாவுக்கு ஆட விரும்ப மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்.
இந்திய அணிக்காக அவரது கடைசி போட்டி 2019 உலகக்கோப்பை அரையிறுதிதான். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவார், ஆனால் நீலச்சீருடையில் இனி அவரைப்பார்ப்பது கடினம்.’ என்றார் ஹர்பஜன் சிங்.
உலகக்கோப்பை மட்டுமல்ல அதற்கு முந்தைய தொடர்களிலிருந்தே தோனியின் பேட்டிங்கில் ஒரு மந்தநிலை இருந்துவருவதை பலரும் விமர்சித்து வந்தனர். பிசிசிஐயின் மைய ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் ‘தல’யைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கரோனா பெரிய பின்னடவைக் கொடுத்துள்ளது.