இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தான் ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கணெரியா கருத்து தெரிவித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் டெஸ்ட் தொடர் தற்போது சமனில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட்கோலி விளையாடவில்லை. கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இந்திய அணிக்கு இது துவக்கத்திலேயே பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சிறப்பாக இந்திய வீரர்கள் செயல்பட்டு வந்தனர். இரண்டாவது இன்னிங்சில் 240 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு தேவைப்பட்டபோது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல பார்மில் இருந்தார்கள். ஆகையால் அதற்குள் தென்னாப்பிரிக்கவை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுவிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது, அப்படி நடக்கவில்லை. தென்ஆப்பிரிக்க வீரர்கள் முன்புபோல் இல்லாமல், இந்திய பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு, தடுப்பாட்டம் விளையாடி அவ்வபோது ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியாக வெற்றியையும் பெற்று விட்டனர்.
விராட் கோலி இல்லாதபோது கேப்டன் பொறுப்பில் இருந்த கேஎல் ராகுல் சரியாக வழி நடத்தவில்லை என்று கருத்துக்கள் வந்தது. ஆனால் இதனை மறுத்து பேசி, கேஎல் ராகுல் காரணமில்லை; விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
“கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்கிறோம் என்றே இல்லாமல் நிதானமாக கையாண்டார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. விராட்கோலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் பால்கனியில் இருந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். கேஎல் ராகுல் என்ன செய்கிறார் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அந்த சமயம் வீரர்களை அனுப்பி அவருக்கு சரியான ஆலோசனைகளை டிராவிட் மற்றும் விராட் கோலி இருவரும்தான் கொடுத்திருக்க வேண்டும். கேஎல் ராகுலுக்கு போதிய அனுபவம் இல்லை என்பதை அவர்கள் அறியவில்லையா?, பந்துவீச்சை சரியாக பயன்படுத்தவில்லை என்று கேஎல் ராகுலை குறை கூறுவது முற்றிலும் தவறானது. அவருக்கு முறையான ஆலோசனைகளை கொடுக்கவில்லை என்பதே எனது விமர்சனம்.” என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.