எங்களோட தோல்விக்கு காரணம் அதுதான்… நடக்கும்னு நெனச்சேன் நடக்கல – ஜோஸ் பட்லர் வருத்தம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து போட்டி முடிந்த பிறகு அழைத்த பேட்டியில் பேசியுள்ளார் ஜோஸ் பட்லர்.

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி இத்தகைய ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் துவக்க வீரர் குர்பாஸ். இவர் 80 ரன்கள் அடித்தார். பின்னர் ஐக்ரம் 58 ரன்கள் மற்றும் கடைசியில் வந்த முஜீப் மற்றும் ரசித் கான் இருவரும் நல்ல பங்களிப்பை கொடுத்திருந்தனர்.

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்களிடம் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களது பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர்.

நல்ல ரன்ரேட்டில் விளையாடி வந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 69 ரன்கள் வித்தியாசத்தில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்கள் அடித்துக் கொடுத்தார்.

போட்டி முடிந்தபிறகு வரலாறு காணாத இந்த தோல்வி குறித்து வருத்தத்துடன் பேட்டி அளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியதாவது:

“டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து விட்டு இவ்வளவு ரண்களை வாரி கொடுத்தது வேதனை அளிக்கிறது. நான் விளையாடிய பொழுது முதல் பந்தை தவறவிட்டது தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துவிட்டது.

ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு உரிய வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அனைத்து விதத்திலும் எங்களை விட நன்றாகவே செயல்பட்டு வெற்றியை பெற்றிருக்கிறார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே சரியாக வெளிப்படுத்த முடியாமல் எங்களது தரத்திற்கும் குறைவாக விளையாடிவிட்டோம்.

ஆப்கானிஸ்தான் அணியில் சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். விளையாடுவதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் பந்து வீசினார்கள். குறிப்பாக ஸ்டம்ப்-க்கு நோக்கி தொடர்ந்து குறிவைத்துபடி  வீசிவந்தார்கள். அதனை கணித்து ஆடாமல் தவறு செய்தோம். இதனை நாங்கள் எங்களது பந்துவீச்சில் செய்ய தவறிவிட்டோம்.

இங்கிலாந்து அணியில் இருக்கும் வீரர்கள் இது போன்ற பல இக்கட்டான சூழல்களை கடந்து வந்திருக்கிறோம். இதிலிருந்து எப்படி மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பதை ஆராய்வோம். இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல.” என்றார்.

Mohamed:

This website uses cookies.