தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றதில் இருந்தே, டெஸ்ட் போட்டிகளில் அக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா அணி எதிர்கொள்வதால் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதமாக இரு அணி வீரர்களும் தாங்கள் தான் கெத்து, தங்களுக்கு டெஸ்ட் தொடர் என அடிக்கடி பேசி வந்தனர்.
இந்தநிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (18-8-22) துவங்கியது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான லீஸ் (5) மற்றும் கிராவ்லே (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இரண்டு துவக்க வீரர்களையும் தென் ஆப்ரிக்காவின் ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சால் வெளியேற்றி அசத்தினார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓலி போப்பையும் (73 ரன்கள்) ரபாடாவே வெளியேற்றினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் தென் ஆப்ரிக்கா அணியின் மிரட்டல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போல் அன்ரிக் நோர்கியா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கிலும் மிக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.