இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 26ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் துவக்க வீரர்களான டீன் எல்கர் 12 ரன்களிலும், எர்வீ 3 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் பந்துவீச்சாளர் ரபாடாவை (36 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால், தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் (103) மற்றும் ஃபோக்ஸ் (113) ஆகியோர் சதம் அடித்து கொடுத்ததன் மூலம் 9 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதன்பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.