சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது
ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணியாக இருந்த ஜிம்பாப்வே அணி, கடந்த சில வருடங்களாக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலையீடு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்திருந்தது.
இதற்காக பேச சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் ஆண்டு மாநாடு கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஐசிசி விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. உடனடியாக ஜிம்பாப்வே அணி மீதான தடை அமலுக்கு வருவதாக ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.சி.சியின் தலைவர் ஷஷாங் மனோகர் கூறுகையில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடப்பது எந்த வகையிலும் ஐ.சி.சியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஐ.சி.சி விதிமுறைகளை மீறிய செயல்கள் அங்கு நடக்கின்றன. அதனால் இந்த இடைக்கால தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்த தடை காரணமாக, ஐ.சி.சி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.