இந்தியா – நியூசிலாந்து போட்டியின் போது சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதலில் தகுதி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று களம் கண்டன. 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் 4 பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்தில் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பேசிய காவலர் ஒருவர், இந்தியா – நியூசிலாந்து போட்டியின் போது சீக்கிய மதத்தைச் சேர்ந்த 4 பேர் சில அரசியல் வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டை அணிந்துகொண்டு தனிநாடு கோரிக்கை தொடர்பான முழக்கங்களை எழுப்பினர். மைதானத்தின் பாதுகாவலர்கள் புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்
இந்தியா – இலங்கை போட்டியின் போது ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் மைதானத்தின் மேலே விமானம் பறந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.
மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால், ஆட்டத்தை தொடர முடியாத சூழல் உருவானது. இதனால் நியூசிலாந்தின் எஞ்சிய இன்னிங்ஸூடன் ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டம் தடைபட்டபோது ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் இன்று தொடர்ந்து விளையாடுவார்கள்.
ஒருவேளை இன்றும் மழை பெய்யும்பட்சத்தில், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும்.