மகனே டெண்டுல்கர் பேர காப்பாத்தீட்டடா.. முதல் ஐபிஎல் விக்கெட்டை எடுத்த அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

‘டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட்டுகள் இல்லாத குறையை தீர்த்துவிட்டாய்.’ என்று அர்ஜுன் டெண்டுல்கர் முதல் ஐபிஎல் விக்கெட் வீழ்த்தியதை பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். துரதிஷ்டவசமாக அந்த சீசனில் காயம் ஏற்பட்டதால் மொத்தமாக விளையாட முடியவில்லை.

மீண்டும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். அந்த சீசனிலும் விளையாட வைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சீசன் நல்ல உடல்தகுதியுடனும் நல்ல பார்மிலும் இருந்த அர்ஜுன் டெண்டுல்கர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட வைக்கப்பட்டார்.

அறிமுக போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. மீண்டும் அடுத்த போட்டியிலேயே ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட வைக்கப்பட்டார். இந்த போட்டியில் பவர்-பிளே ஓவர்களில் இரண்டு ஓவர்கள் வீசினார். 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அதன்பிறகு போட்டியின் கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் 20ஆவது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு யார்கர் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகள் வீசி பேட்ஸ்மேனை திணறடித்தார்.

கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் புவனேஸ்வர் குமார் விக்கெட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணியை ஆல் அவுட் செய்தார். ஐபிஎல் வரலாற்றில் அர்ஜுன் டெண்டுல்கர் எடுக்கும் முதல் விக்கெட் இதுவாகும். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக கொண்டாடினார். சச்சின் டெண்டுல்கர் போட்டி முடிந்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

பலரும் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி பாராட்டி வந்தபோது, ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான வாழ்த்தை பதிவிட்டு இருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

“மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. கேமரூன் கிரீன் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தினார். திலக் வர்மா, வழக்கம் போல தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் ஐபிஎல் போட்டிகள் மிகவும் ஆர்வமாக சென்று கொண்டிருக்கிறது.” என்று முதலில் பதிவிட்ட அவர், அடுத்த வரியில், “கடைசியில் டெண்டுல்கர் பெயரில் ஐபிஎல் விக்கெட் வந்துவிட்டது.” என்றும் பதிவிட்டு இருந்தார்.

Mohamed:

This website uses cookies.