ஆப்கானிஸ்தான் அணியில், சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் லால்சந்த் ரஜ்புத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆப்கான் சுழல்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முஜிப் ஆகியோர் மிரட்டினார்கள். ரஷித்கான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஆப்கான், இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
முதல் போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி னார் ரஷித் கான். அடுத்தப் போட்டியில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் 14-ம் தேதி விளை யாடுகிறது.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டி பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் ஆப்கானிஸ்தான் அணியின் 2016-17-ம் ஆண்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தவருமான லால்சந்த் ரஜ்புத் கூறும்போது,
‘பெங்களூர் பிட்ச், பந்து நன்றாக திரும்பும் நிலையில் அமைக்கப்பட்டால் நமக்கு சிரமம்தான். ஏனென்றால் ரஷித்கான் அபாயகரமான சுழல் பந்துவீச்சாளர். ஆப்கான் ஸ்பின்னர்கள் அதில் நன்றாக சாதிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அணியில் குறைந்தபட்சம் மூன்று நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.
ரஷித்கான் பந்தை வேகமாக அடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி அடித்தால் விக்கெட்டை இழக்க நேரிடும். முன் கால்களை நகர்த்திதான் ஆட வேண்டும். பின்பக்கம் கால்களை நகர்த்தக் கூடாது. அதோடு அவர் பந்தில் சிங்கிளாக எடுக்க வேண்டும்’ என்றார்.
ரஷித்கானின் மாயஜால சுழற்பந்துவீச்சால், வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி. டேராடூனில் நேற்று இந்த போட்டி நடந்தது.
மிரட்டல் சுழற்பந்துவீச்சுக்கு சொந்தக்காரரான ரஷித்கான் 4 ஓவர்களில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசம் வீழ்ச்சிக்கு சிம்மசொப்னமாக இருந்தார். முதல் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதைவென்ற ரஷித்கான் இந்த ஆட்டத்திலும் 2-வது முறை ஆட்டநாயகனாக தேர்வானார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று வென்று ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
19வயதான ரஷித்கான் பந்துவீச வந்ததில் இருந்து வங்கதேச வீரர்கள் நடுங்கினார்கள். அதிலும் அவரின் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர், பவுண்டரி அடிக்க முயற்சித்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. வங்கதேச வீரர்களுக்கு நிற்கவைத்து படம் காட்டிய ரஷித்கான் 16-வது ஓவரில் 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ‘கிலி’ ஏற்படுத்தினார்.
வாழ்க்கை நிச்சயமில்லாத, எந்தநேரமும், வெடிகுண்டுகளுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் மத்தியிலும் வாழ்ந்து, கிரிக்கெட் பயிற்சி எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு, டி20 தொடரை முதல்முறையாக வெல்வது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். அதிலும் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் கடந்த ஓர் ஆண்டாக வீட்டுக்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.