ஐபிஎல் தொடர் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்று கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் டி20 உலக கோப்பை குறித்து முடிவு எடுக்க அடுத்த மாதம் வரை காத்திருப்போம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கு சிஎஸ்கே ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் முதுகெலும்பாக இருப்பது இந்திய வீரர்கள். ஆனால், எங்களுடைய அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சுனில் நரைன், அந்த்ரே ரஸல், மோர்கன், தற்போது கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் மற்றும் அவர்கள் இணைந்து சிறந்த அணியை உருவாக்க முடியும். இந்த காம்பினேசன் சிறப்பை உருவாக்கும்’’ என்றார்.
எனவே ஐபிஎல் போட்டியின் கட்டமைப்பில் நாம் மாற்றம் செய்யக்கூடாது. இதன் கட்டமைப்பினால் தான் அதிகப் புகழை அடைந்துள்ளது.
கேகேஆர் அணி சார்பாக மட்டுமல்லாமல் அனைத்து அணி சார்பாகவும் நான் கூறிக்கொள்வது – இந்த வருட ஐபிஎல் போட்டியில் எங்களுக்கு எல்லா ஆட்டங்களும் எல்லா வீரர்களும் வேண்டும். எப்போது ஐபிஎல் நடைபெற்றாலும் இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் ஐபிஎல் தொடர்பாக கங்குலி கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.