இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியுடன் தனக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை, கிரிக்கெட் உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முன்னாள் வீரர் தோனியின் பங்கு மிக முக்கியமானது. சரவுவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்ற தோனி, தனது திறமையான கேப்டன்சி மூலம் இந்திய அணிக்கு, ஐசிசி.,யால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
தோனியின் கேப்டன்சியை இன்று வரை யாராலும் குறையே சொல்ல முடியாது என்றாலும், தோனி மீது சேவாக், கம்பீர் போன்ற வீரர்களின் ரசிகர்களில் தற்போது வரை கோவத்துடனே உள்ளனர். சேவாக், கம்பீர் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு தோனி காரணம் என்பதே அவர்களது கோவத்திற்கான காரணம்.
சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்களின் ரசிகர்கள் தான் தோனியை தற்போது வரை விமர்சித்துள்ளனர், ஆனால் கவுதம் கம்பீரோ கடந்த பல வருடங்களாவே தோனியை நேரடியாக விமர்சித்து வருகிறார். தோனி மீதான தனது வன்மத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வருவதால், பெரும்பாலான இந்திய ரசிகர்கள் கவுதம் கம்பீரை வெறுத்துவிட்டனர் என்றால் அது மிகையாகாது.
இந்தநிலையில், கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தோனிக்கும், தனக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ தோனி மீது எனக்கு பரஸ்பர மரியாதை உள்ளது. அது எப்போதுமே இருக்கும். தோனிக்கு தேவைப்படும்போது நான் அவர் பின்னால் நிற்பேன். அப்படி ஒரு சூழல் இல்லை. ஒருவேளை அப்படி தேவைப்பாட்டால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்பிற்காக அவருக்காக நான் நிற்பேன். கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவர் கேப்டனாக இருந்தபோது நீண்டகாலம் நான் தான் துணை கேப்டனாக இருந்திருக்கிறேன். அவருக்கென்று சில கருத்துகள் இருக்கும். எனக்கும் என்னுடைய கருத்துகள் இருக்கும். ஆட்டத்தை அவர் பார்க்கும் விதமும், நான் பார்க்கும் விதமும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அதற்காக சண்டை என்றெல்லாம் இல்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.