டி.20 உலகக்கோப்பை நடக்குமா..? இல்லையா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி
ஏற்கனவே திட்டமிட்டபடி உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கும் என ஐசிசி உறுதியாக தெரிவித்துள்ளது.
உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் தவித்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச அளவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் தாறுமாறாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடக்காத காரணத்தால், வீரர்களின் சம்பளத்தில் அணி நிர்வாகம் கைவைக்க துவங்கியுள்ளது.
இதே போல பல கோடிகளில் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடந்த பிசிசிஐ படாதபாடு பட்டு வருகிறது. அதே நேரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில், வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என ஆஸ்திரேலியா டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்தும் பின் வாங்கியது.
அதே போல தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் ஆஸ்திரேலியா மூடியுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் சூழலில், ஐசிசி டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து உள்ளூர் கமிட்டி கூர்மையாக கவனித்து வருகிறது. தொடர்ந்து அந்த குழு சூழ்நிலையை கண்காணித்து வரும். தற்போதைக்கு திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவின் 7 இடங்களில் உலகக்கோப்பை தொடர் நடக்கும்” என அதில் குறிப்பிட்டுள்ளது