ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடிக்காதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி அதற்குப் பின் இன்று வரை கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறி வருகிறார்.
என்னதான் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இரண்டு வருடங்களில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது, மேலும் விராட் கோலி சதம் அடிக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தேவையில்லாத ஷாட்களை அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தது ஒரு நல்ல பேட்ஸ்மேனுக்கு உகந்தது கிடையாது என்று விராட் கோலி மீது தனது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் விராட் கோலிக்கு ஆதரவாக பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது தனது கருத்தை பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலியின் நிலைமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது, அவர் நீண்ட காலமாக பயோ பப்பிலில் இருக்கிறார் மேலும் விராட் கோலி ஒரு குழந்தையின் தகப்பனாகவும் இருக்கிறார், பயோ பபிலில் இருப்பதால் அவரால் குறைவாகவே தனது மகளையும் மனைவியையும் சந்திக்க முடிகிறது, இது எல்லாம் எப்படிப்பட்ட ஒரு சிறந்த வீரராக இருந்தாலும் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் இந்த ஒரு காரணம் விராட் கோலியின் பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று டேவிட் வார்னர் பேசியிருந்தார்.
மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலி தற்போது கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இதன் காரணமாக வெகு விரைவில் மீண்டும் சதம் அடிப்பார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.