ஹர்திக் பாண்டியா இந்தியாவின் சொத்து : லேன்ஸ் க்ளுஸ்னர்

UNITED KINGDOM - OCTOBER 20: CRICKET : LANCE KLUSENER / SOUTH AFRICA (Photo by David Munden/Popperfoto/Getty Images)

இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக ஹர்திக் பாண்ட்யா திகழ்கிறார். இவரின் வேகப்பந்துவீச்சில் முன்னேற்றம் செய்து கொண்டால், திறமையான ‘ஆல்-ரவுண்டராக’ உருவெடுக்கலாம்,” என, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் குளூஸ்னர் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. ஆனால், ஹர்திக் பாண்ட்யா ‘ஆல்-ரவுண்டராக’ ஜொலித்தார். இரு இன்னிங்சையும் (93+1) சேர்த்து 94 ரன் விளாசிய இவர், 3 விக்கெட் சாய்த்தார். எதிர் வரும் போட்டிகளிலும் இவரின் இந்த கச்சிதமான பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தென் ஆப்ரிக்க முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ லான்ஸ் குளூஸ்னர் கூறியது: கேப்டவுன் டெஸ்டில் இந்திய வீரர் பாண்ட்யாவின் ‘பேட்டிங்’ வியப்பாக இருந்தது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு பந்துவீச்சிலும் நெருக்கடி தந்தார். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக திகழ்கிறார். இவரின் ‘வேகத்தை’ மட்டும் சற்று முன்னேற்றம் செய்து கொண்டால், திறமையான ‘ஆல்-ரவுண்டராக’ உருவெடுக்கலாம். சில நேரங்களில் பாண்ட்யா ஏமாற்றலாம். ஆனால், தொடர்ந்து ஊக்கம் அளித்தால் இவரிடம் இன்னும் சிறப்பான திறமையை வெளிக்கொண்டு வர முடியும். இந்திய அணியோ அல்லது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியோ என எதுவாக இருந்தாலும், இவரை சுற்றி அதிக திறமையான வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாண்ட்யாவுக்கு ஊக்கம் தர வேண்டும்.

தவறான செயல்:

இந்திய அணி, துணைக்கண்டத்தில் விளையாடும்போது, பயிற்சி போட்டியில் பங்கேற்பது அவசியம் இல்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட ஆடுகளம் என்பதால் தேவைப்படாது. ஆனால், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் முன், கண்டிப்பாக பயிற்சி போட்டி தேவை. இது, அன்னிய மண்ணில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள உதவும். தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் பங்கேற்றால் நிச்சயமாக பயிற்சி போட்டியில் விளையாடி சூழ்நிலையை தெரிந்து கொள்கிறது. எனவே, இம்முறை இந்திய அணி பயிற்சி போட்டியை ரத்து செய்தது தவறு.

பாடம் கற்குமா:

கேப்டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாண்ட்யா 93 ரன் குவிக்காமல் இருந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக அமைந்திருக்கும். தவிர, சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக மட்டுமே சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடியது. இதனால், சவால் தரக்கூடிய உண்மையான ‘வேகத்தை’ இந்திய பேட்ஸ்மேன்கள் சந்திக்கவே இல்லை. இதனால்தான், கேப்டவுன் டெஸ்டில் குறைந்த இலக்கை விரட்டவே திணறினர். இந்திய அணி முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

அசத்தும் ‘வேகம்’:

ஒட்டுமொத்த இந்திய அணியின் பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது. இந்திய அணி தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாது. ஒருவேளை, ஒரு வெற்றி அல்லது ஒரு ‘டிரா’ பெறலாம். எனது கணிப்புப்படி, இந்திய அணி இத்தொடரை வெல்ல வாய்ப்பில்லை. 1-0 அல்லது 1-1 என தொடர் எட்டுவதற்கே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு குளூஸ்னர் தெரிவித்தார்.

Editor:

This website uses cookies.