மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆடுகளம் நடிகை டாப்ஸி பன்னு மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்த தருணத்தில் படத்துக்கான அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதற்கேற்றாற்போல இன்று அறிவிப்பினை வெளியிட்டது.
ராஜஸ்தான் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் வசித்து வருகிறார் மித்தாலி ராஜ். 1999 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடிவரும் இவர், 20 ஆண்டுகள் கடந்து கிரிக்கெட் ஆடும் ஒரே பெண் வீராங்கனை என்ற சாதனையை அண்மையில் படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீராங்கணை என்ற பெருமைக்குரிய வீராங்கனையும் இவரே. டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற இவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பெண்கள் உலகக்கோப்பை போட்டிக்காக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் படத்தில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகை டாப்ஸி, மித்தாலியாக நடிக்க இருக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தினை வையாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ராகுல் தொலகியா இயக்குகிறார். இந்த நிலையில், இன்று மித்தாலி ராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை சந்தித்த டாப்ஸி, மிதாலியுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.
மேலும், மித்தாலியின் பிறந்தநாளை முன்னிட்டு டாப்ஸி நடிக்கும் மித்தாலியின் வரலாற்றுப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. ‘சபாஷ் மித்து’ என்ற பெயருடன் உருவாகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.