சர்ச்சை பேச்சுக்காக விளம்பர வாய்ப்புகளை இழக்கு உள்ளார் ஹர்திக் பாண்டியா.
காஃப் வித் கரண் நிகழ்ச்சியில் பாண்டியா, ராகுல் பங்கு பெற்று பேசியது பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்ப இருவரையும் குறைந்தது 2 போட்டிகளுக்காவது தடை செய்ய வேண்டும் என்று பிசிசிஐ உச்ச நீதிமன்ற நியமன நிர்வாகிகள் கமிட்டி உணர்கிறது.
தன் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க விஷயங்களை கூச்ச நாச்சமில்லாமல் பாண்டியா போட்டு உடைத்தார். மேலும் பாலிவுட் நடிகைகள் உட்பட பெண்களை பற்றி இழிவாகப் பேசியதாக சர்ச்சைகள் கிளம்ப இருவருக்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் டேட்டிங், நடிகை பரினீத்தி சோப்ராவுடன் திருமணம், ஈஷா குப்தா, ஊர்வசி ரவுத்தாலாவுடன் உல்லாசம் என்று பாண்டியா கண்டபடி உளறினார். ராகுலும் தன் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். இருவரது பேச்சும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நியமன பிசிசிஐ நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர் விநோத் ராய், கிரிக் இன்போ இணையதளத்திடம் கூறும்போது, “இந்த இருவரும் பேசியதை அச்சில் இன்று படித்தேன். மிகவும் மோசமானது. எந்த மன்னிப்பும் அதனை மறைத்து விட முடியாது. டயானா எடுல்ஜி இவர்களுக்கான தண்டனை என்னவென்று கூறுமாறு கேட்டுள்ளேன். இருவருக்கும் 2 போட்டிகள் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று கருதுகிறேன்” என்றார்.
பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி இன்னும் கடுமையான தண்டனை வேண்டும் என்று கருதுவதாகத் தெரிகிறது.
“ஸ்மித், வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட சிஓஏ தடை விதித்துள்ள நிலையில் தற்போது பாண்டியா, ராகுலுக்கு 2 போட்டிகள் மட்டும் தடை என்பது இடைக்கால ஏற்பாடு மட்டுமே. இவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியும், பயிற்சியாளருமே இன்னும் கொஞ்சம் விவேகமாகப் பேசும், நடந்து கொள்ளும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்” என்று சவுத்ரி கூறியதாக கிரிக் இன்போ தெரிவித்துள்ளது.
மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி, பிசிசிஐ சட்டப்பிரிவின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார். பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரியும் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் எவ்வாறு பங்கேற்றனர் என விசாரணை செய்ய வேண்டும். வீரர்களை அண்டாமல் விளையாட்டு பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைக்கும் நிலையில் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றது வியப்பை தருகிறது என்றார் செளதரி.