இந்திய பெண்கள் அணி பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்துள்ளார். சமீபத்தில் நடந்த பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் வீழ்ந்தது. இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியில் ‘சீனியர்’ வீராங்கனை மிதாலியை சேர்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு, பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகக்குழு உறுப்பினர் எடுல்ஜிதான் காரணம் என மிதாலி குற்றம் சாட்டினார். தற்காலிக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இப்பதவிக்கு வரும் 14ம் தேதி வரை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரமேஷ் பவார் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து ரமேஷ் பவார் கூறுகையில்,‘‘ இந்திய பெண்கள் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத், மந்தனாவின் ஆதரவு எனக்கு இருக்கிறது,’’ என்றார்.
ஹர்மன்பிரீத் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகக்குழு உறுப்பினர் எடுல்ஜியின் ஆதரவும் ரமேஷ் பவாருக்கு கிடைத்துள்ளது. இதற்கு, மிதாலி எதிர்ப்பு காட்டுவதால் மீண்டும் அணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்புமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் மீண்டும் ரமேஷ் பவாரையே பயிற்சியாளராக நியமிக்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து ஹர்மன் பிரீத் கவுர் எழுதிய கடிதத்தில், ”ரமேஷ் பவார் எங்களை வீரர்களாக மட்டும் மேம்படுத்தவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி எங்களது எல்லைகளை நாங்களே உடைக்கும் சவால்களை உருவாக்கினார். பவார் திட்ட ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முகத்தை மாற்றினார்.
மிதாலி அரை இறுதியில் நீக்கப்பட்டது முற்றிலும் அந்த ஆட்டத்தின் நிலைமையைப் பொறுத்தது. மூத்த அதிகாரிகள் பலரது ஆலோசனைகளுக்குப் பிறகுதான் அந்த அணி தேர்வு நடந்தது. பவாரையே மீண்டும் அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். அவரை மாற்ற தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
இந்த நிலையில் மிகவும் முக்கியமான நாக்-அவுட் ஆட்டத்தில் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காயத்திலிருந்து குணமடைந்த பின்னரும் அவர் அரை இறுதியில் சேர்க்கப்படாத விஷயம் பெரிதாகக் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து மிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார், நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினராக உள்ள டயானா எடுல்ஜி ஆகியோரை குற்றம் சாட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.