இவர், யார் எந்த பவுலர் என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. எப்படிப்பட்ட பந்து என்பதை பார்த்து சிறப்பாக எதிர்கொள்கிறார். அவரின் ஆட்டம் அணிக்கு வெற்றியை பெற்று தந்து வருகிறது என 20 வயது மும்பை வீரரை பெருமிதமாக பேசியுள்ளார் ரோகித் சர்மா.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 17.5 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன், இப்போட்டியில் அதற்கான பதிலை கொடுத்து பல்வேறு விமர்சனர்கள் வயடைத்தார்.
இவர் 40 பந்துகளில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இஷான் கிஷன் 38 ரன்கள், இளம் வீரர் திலக் வர்மா 17 பந்துகளில் 37 ரன்கள் என தங்களது பங்கிற்கு அடித்துக்கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
சற்று கடினமான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது சொந்த மைதானத்தில் ஆடுவதைப் போலவே தெரியவில்லை. வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அவர்களுக்கு அவர்களே பிரச்சனையை உண்டாக்கி கொண்டனர். இதனால் அணியின் ரன்குவிக்கும் வேகம் மிகவும் குறைந்தது. அழுத்தமும் ஏற்பட்டது
மிடில் ஓவர்களில் வந்த கிளாசன் 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்து மீண்டும் நம்பிக்கையை கொடுக்க, இலக்கை சேஸ் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை ஹைதராபாத் அணிக்கு பிறந்தது. இருப்பினும் அதன் பிறகு வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட் இழந்ததால் ஹைதராபாத் அணி பெரிதாக செயல்பட முடியவில்லை. மயங்க் அகர்வால் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்ததே அதிகபட்ச சிகோராக இருக்கிறது.
19.5 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றிருக்கிறது.
போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா, “இந்த மைதானத்தில் எனக்கு நிறைய நினைவுகள் இருக்கின்றன. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இங்கு மூன்று வருடங்கள் விளையாடினேன். கோப்பையையும் வென்றிருக்கிறேன். இங்கு எப்போது வந்து விளையாடினாலும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.” என்றார்.
மேலும், “அணியில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட சில வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து தொடர்ச்சியான வாய்ப்புகளையும் கொடுப்பது முக்கியம். அப்போதுதான் அவர்களால் அணிக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் பழக முடியும். கடந்த சீசனில் முதல்முறையாக விளையாடிய திலக் வர்மா, இப்போது எவ்வாறு விளையாடி வருகிறார் என்பதை பார்க்கிறோம்.
திலக் வர்மா, பந்துவீச்சாளர்களை பற்றி பயமே இல்லாமல் எதிர்கொள்கிறார். எப்படிப்பட்ட பந்து என்பதை மட்டும் பார்த்து விளையாடுகிறார். அதுபோல இளம் வீரர்களும் வருவார்கள். இவர்களுக்கு அணியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரோல், சுதந்திரமாக களத்திற்குள் வந்து தங்களது இயல்பான பேட்டிங்கி மற்றும் பவுலிங்கை வெளிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.
அர்ஜுன் டெண்டுல்கர் 3 வருடங்களாக மும்பை அணியுடன் பயணித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். தற்போது அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். அவருக்குள்ளேயே நம்பிக்கை இருந்தது அதன் காரணமாகவே அவரை விளையாட வைத்தோம். திட்டம் என்ன? நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்பதை தெளிவாக புரிந்துகொண்டு விளையாடும் அவர், பவர்-பிளே ஓவர்களில் நன்றாக ஸ்விங் செய்கிறார். டெத் ஓவர்களில் நன்றாக யார்கர்கள் வீசுகிறார். இது அணிக்கு மேலும் பலம்.” என்றார்.