சுலபமான முறையில் ஆட்டமிழந்ததற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் பொல்லாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி எப்போதும் பந்துவீச்சை தேர்வு செய்யும். ஆனால் புதிதாக விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இருப்பினும் பேட்டிங் எடுத்தது சற்றும் தவறில்லை என நிரூபிக்கும் வகையில், இந்திய அணியின் துவக்க ஜோடியான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் அபாரமாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சோர்வடையும் வகையில், எவ்வித தவறான சாட்களையும் விளையாடாமல் மிகவும் நிதானம் காத்து வந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்தது. துரதிஸ்டவசமாக மயங்க் அகர்வால் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதற்கு அடுத்ததாக வந்த புஜாரா வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 4-வது வீரராக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி எதிர்பார்த்ததை போலவே நன்றாக துவங்கினார். எந்த திணறலும் இல்லாமல் பவுண்டரிகளை அடித்து வந்த விராட் கோலி, 35 ரன்கள் எடுத்திருந்தபோது வெளியே சென்ற பந்தை விளையாட முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி விளையாடிய விதம் வைத்து பார்க்கையில், எளிதாக அரைசதம் கடந்து, இம்முறை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் எளிதான பந்தில் விக்கெட் கொடுத்து வெளியேறியது விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இது குறித்து தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் கூறியதில், “விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. களத்தில் நிலையான ஆட்டத்தை பெற்ற பிறகு, மிகப் பெரிய ஸ்கோர் எடுப்பார் என்ற அளவிற்கு அவரது ஆட்டம் இருந்தது. அவரது கால்கள் பந்தை நோக்கி சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தன. 35 ரன்கள் அடித்து நிலைத்து நின்று கொண்டிருந்தபோது, தேவையில்லாமல் வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட்டான காரணத்திற்காக, ஹோட்டல் அறையில் அமர்ந்து, இதனை நினைத்து மிகவும் ஆத்திரத்துடன் இருப்பார் என நினைக்கிறேன்.” என்றார்.