இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராத் கோலி அடித்த சதமும் அவருக்கு உறுதுணையாக நின்ற ரஹானே அடித்த 79 ரன்களும் அணியின் வெற்றிக்கு உதவின.
இந்நிலையில் நான்காவது வீரராக களமிறங்குவது பற்றி ரஹானே கூறியதாவது:
டர்பனில் நடந்த போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கினேன். ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருக்கிறேன். நாட்டுக்காக விளையாடும்போது, நிர்வாகம் எந்த இடத்தில் இறங்க சொல்கிறதோ, அதில் இறங்கி ஆட வேண்டியது கடமை. அந்த வகையில் நான்காவது வீரராக களமிறங்கி ஆடினேன். இந்த இடமும் எனக்கு சிறப்பாகவே இருக்கிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான் அடித்த ரன்கள் எனக்கு நம்பிக்கையை தந்தது. இதையடுத்து டர்பன் ஒரு நாள் போட்டியில் களமிறங்கும்போது, ஒன்றை முடிவு செய்தேன். அதாவது களத்தில் நின்று பார்ட்னர்ஷிப்பை பலப்படுத்துவது, அதே நேரத்தில் ரன்களை வேகமாகக் குவிப்பது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சவால் கொடுப்பார்கள் என்பது தெரியும். தொடக்கத்தில் ரபாடாவும் மிடிலில் தாஹிரும் நெருக்கடி கொடுப்பார்கள் என நினைத்தோம். அவர்களை விட்டு விட்டு மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து ஆட முடிவு செய்தோம். அதன்படியே செய்து வெற்றிபெற்றோம். இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு கூறினார்.