உலகக் கோப்பையில் தான் சரியாக விளையாடவில்லை என்றும், நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.
டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நத்தத்தில் நடைபெற்ற போட்டியை சிறப்பிக்க இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், “இதுபோன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து ஐபிஎல், ரஞ்சி போட்டிகளில் இடம்பெற மிகவும் உதவுகிறது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்தியா முழுவதும் கவனிக்கப்படுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இயற்கை வளம் மிகுந்த அழகான இடமாக நத்தம் இருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் வளர்ந்து வருவது கிரிக்கெட் வளர்ச்சி உதவியாக இருக்கும். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகிறது” என்றார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று இரவு திண்டுக்கல்லில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஜெகதீசன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சதுர்வேத் அஸ்வினுக்கு சப்போர்ட் ஆக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அஸ்வின் 19 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அப்போது திண்டுக்கல் 8.4 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது.
அஸ்வின் ஆட்டமிழந்ததும் அத்துடன் திண்டுக்கல்லின் ஸ்கோர் உயர்வில் தொய்வு ஏற்பட்டது. 15.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சேப்பாக் கில்லீஸ் அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேப்பாக் அணி சார்பில் அலெக்சாண்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.