ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்திய அணி தோல்வியை தழுவி வருவதற்கும் அதுதான் காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
சமீபகாலமாக இந்திய அணிக்கு ஒரு குறையாக இருப்பது மூத்த வீரர்கள் சரியாக செயல்படாமல் ஆட்டமிழப்பது தான். முதலில் விராட் கோலி மோசமான பார்மில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பி வருகிறார். ஆனால் ரோகித் சர்மா ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. டி20 உலக கோப்பை நெருங்கி வருவதால் கூடுதல் பயத்தையும் பின்னடைவையும் தந்து கொண்டிருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். மீதமுள்ள போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய மைதானமாக இருந்தாலும் ரோகித் சர்மா அவசரப்பட்டு 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
இதுவரை 2022 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவிற்கு எதிர்பார்த்த ஆண்டாக அமையவில்லை. 18 டி20 போட்டிகளில் விளையாடி, 434 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 25.51 மட்டுமே. மேலும் இதில் இரண்டு அரைசதங்களும் அடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து பார்க்கையில் ரோகித் சர்மாவிற்கு இதுதான் மிக மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. இன்னும் டி20 உலக கோப்பை தொடர் மீதம் இருப்பதால் அதில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரோகித் சர்மா, 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு, மூன்றுவித போட்டிகளுக்கும் முழு நேர கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்தாலும், சமீபகாலமாக மிக முக்கியமான போட்டிகளில் தோல்வியை தழுவி வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை என்று காட்டமாக பேட்டி அளித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
“ரோகித் சர்மா கவனமாக இருக்காமல் தன்னை தானே விக்கெட் இழந்து செல்கிறார். அவர் நினைத்தால் நிதானத்துடன் விளையாடலாம். வழக்கமாக ரோகித் சர்மா 40 பந்துகள் பிடித்திருந்தால் நிச்சயமாக அவரது ஸ்கோர் 70 முதல் 75 ரன்கள் டி20 போட்டிகளில் வந்திருக்கும். ஆனால் எதற்காக துவக்கம் முதலே அதிரடியாக ஆடுகிறேன் என நினைத்துக் கொண்டு எளிதாக அவுட் ஆகிறார் என்று. இவரது பேட்டிங் அணுகுமுறை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதேநேரம் கேப்டன்ஷிப் அணுகுமுறையும் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் சமமான அணியை எடுக்காமல் முன்னுக்கு பின் முரணான அணியை எடுத்து வருகிறார். சில நேரங்களில் கூடுதல் பேட்டிங் தேவை என நினைக்கிறார். சில நேரங்களில் கூடுதல் பந்துவீச்சு தேவை என நினைக்கிறார். அது தவறில்லை. ஆனால் ஆல்ரவுண்டர்களை அதுபோன்ற நேரங்களில் சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த இடத்தில் தவறவிடுவது தோல்வியில் முடிகிறது.” என்றார்.