யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல… மைக்கெல் வானுக்கு சரியான பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா
யாரிடமும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என்று ஹர்திக் பாண்டியா, மைக்கேல் வான் கூறிய விமர்சனத்திற்கு பதில் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது.
குறிப்பாக நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. தொடர் துவங்குவதற்கு முன்பு கோப்பை நமக்குத்தான் என்று வாய் சவடால் விட்ட இந்திய அணி, தற்போது ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியை விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது வைத்து, வரலாற்றில் வெள்ளை பந்து தொடர்களில் மிக மோசமான அணி என்றால் அது இந்திய அணி தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் வான் தெரிவித்ததாவது, “வரலாற்றில் வெள்ளை பந்து தொடரில் மோசமாக செயல்படும் அணி என்றால் அது இந்திய அணி தான், அதிகமான திறமை இருந்தும் டி20 தொடரில் இந்திய அணி மோசமாக செயல்படுவது வியப்பாக உள்ளது, அவர்களிடம் வீரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது சுத்தமாக தெரியவில்லை. டி20 போட்டியில் பவர் பிளே ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அமைத்துக் கொடுக்கிறார்கள்” என்று இந்திய அணியை மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹர்திக் பாண்டியா நாங்கள் யாரிடமும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசியதாவது, “ஒரு அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால் மக்கள் அவருடைய கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம் தான், அதை நாங்கள் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை உண்டு, ஆனால் சர்வதேச தரத்தில் நாங்கள் எதையும் யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, இது ஒரு விளையாட்டு, இதில் கடுமையாக முயற்சி செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம், அந்த முடிவை நம்மால் மாற்ற முடியாது, அதை கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்” என்று ஹர்திக் பாண்டியா மைக்கேல்வான் தெரிவித்ததற்கு எதிர் கருத்தை வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.