மட்டமான ஆளுங்க… என்னோட 15 வருச கிரிக்கெட் வாழ்க்கைல இவுனுகள மாதிரி யாரையுமே பார்த்தது இல்ல; பகிரங்கமாக பேசிய மேத்யூஸ் !!

மட்டமான ஆளுங்க… என்னோட 15 வருச கிரிக்கெட் வாழ்க்கைல இவுனுகள மாதிரி யாரையுமே பார்த்தது இல்ல; பகிரங்கமாக பேசிய மேத்யூஸ்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தன்னை டைம் அவுட் முறை அவுட்டாக்கிய வங்கதேச வீரர்களை, இலங்கை அணியின் ஆங்கிலோ மேத்யூஸ் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலன்கா 108 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாண்டோ 90 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 42வது ஓவரில் இலக்கை எட்டிய வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை – வங்கதேசம் இடையேயான இந்த போட்டி கடைசி வரை பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. இலங்கை வீரரான மேத்யூஸ் களத்திற்கு வர ஓரிரு நொடிகள் தாமதம் ஏற்பட்டதால், வங்கதேச வீரர்கள் இதற்கு அவுட் அப்பீல் கேட்டனர். விதிமுறைகளின் படி 2 நிமிடங்களுக்குள் ஒரு பேட்ஸ்மேன் களத்திற்குள் வரவில்லை என்றால் அவுட் டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கலாம் என்ற விதியின் அடிப்படையில் அம்பயர்கள் மேத்யூஸிற்கு அவுட்டும் கொடுத்தனர். இதுவே இரு அணி வீரர்கள் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடைசி வரை இரு அணி வீரர்களும் அடிக்கடி மோதி கொண்டே இருந்தனர்.

இந்த போட்டியில் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட்டாக்கப்பட்டது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆங்கிலோ மேத்யூஸ் வங்கதேச வீரர்களை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து மேத்யூஸ் பேசுகையில், “ஷாகிப் அல் ஹசன் மற்றும் வங்கதேச வீரர்களின் இந்த செயல் மிக மிக மோசமானது. நான் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஆடுகளத்திற்கு வந்துவிட்டேன். நான் கிரீசில் இருந்தபோதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது. அதை நடுவர்களும் பார்த்தனர். அப்போது எனக்கு 5 வினாடிகள் இருந்தன, இது நடுவர்களுக்கும் தெரியும், அவர்களும் இதை பார்த்தனர்.
எனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியோ அல்லது வீரரோ இவ்வளவு கீழ்நிலையில் இருப்பதை பார்த்ததில்லை. துரதிஷ்டவசமாக எனது ஹெல்மெட்டின் பட்டை உடைந்ததால் மட்டுமே சில நொடிகள் தாமதம் ஏற்பட்டது, வேறு எந்த அணியாக இருந்தாலும் வங்கதேச வீரர்களை போன்று கீழ்தரமாக செயல்பட்டிருக்க மாட்டார்கள். ஷாகிப் அல் ஹசன் மீதும், வங்கதேச வீரர்கள் மீதும் இருந்த மரியாதை தற்போது முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது. ஹெல்மெட் அணியாமல் என்னால் எப்படி விளையாட முடியும். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.