தோனி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவருக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர விரும்புவதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து கொண்டன. அதற்கு முன்னதாக சில அணிகள் சக அணிகளிடம் இருந்து வீரர்களை பறிமாறி கொண்டது. இதில் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், சென்னை அணியில் இணைந்துள்ளது குறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, தோனிக்காக சென்னை அணிக்கு கோப்பையை வென்று தர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், “வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க. எனக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கமும், நன்றியும். இது கொஞ்சம் லேட்டுன்னாலும், லேட்டஸ்ட்டா சொல்லியிருக்கேன்னு நினைக்குறேன். நான் தோனியுடன் விளையாடி 13 ஆண்டுகளாகிவிட்டது. தோனி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவருடன் இணைந்து ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆர்வத்துடன் உள்ளேன். ராயுடு, ரெய்னாவுடன் விளையாடுவதும் மகிழ்ச்சி. எனக்கு விசில் போட தெரியாது. ஆனால் உங்க எல்லோரையும் விசில் போட வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.