விராட் கோஹ்லியை போன்ற சிறந்த வீரரை பார்த்தது இல்லை; ஜஸ்டின் லங்கர் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை போன்ற சிறந்த வீரரை தான் பார்த்தது இல்லை என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
இதற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “எல்லா புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராகுவோமோ அதேபோல்தான் தயாராகினோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார்கள்.
வீரர்களின் செயல்பாடு வியக்கத்தக்க பெருமை அளிக்கிறது. உலகக்கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வது கடுமையாக இருக்கப் போகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா வந்ததில் இருந்து எங்கள் அணி நம்ப முடியாத வளர்ச்சி அடைந்துள்ளது.
விராட் கோலியை போன்ற வீரரை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி சிறப்பான வகையில் போட்டியிடும் உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது” என்றார்.
கோஹ்லி மீது கம்பீர் காட்டம்;
ஆஸ்திரேலிய பயிற்சியாளரான ஜஸ்டின் லங்கர் விராட் கோஹ்லியை பாராட்டி இருக்கும் அதே வேளையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய காம்பீர், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கருதுகிறேன். ஆனால் இந்த அணி, சிறந்த 11 வீரர்களை கொண்ட அணி என்று நான் கருதவில்லை. விராட் கோலி கிட்டத்தட்ட இந்த அணிதான் உலக கோப்பையில் ஆடப்போகிறது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த அணியில் பேட்டிங் டெப்த் கிடையாது. தோனி அணியில் இணைந்தாலும் கூட இந்த அணி சிறந்த அணியாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.