சரி.. தப்பு எல்லாம் எனக்கு தெரியாது… இந்த ஒரு விசயம் தான் எங்களுக்கு முக்கியம்; மேத்யூஸ் விக்கெட் குறித்து ஓபனாக பேசிய ஷாகிப் அல் ஹசன்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38வது போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதின.
டெல்லியில் நடைபெற்ற இ ந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் பேட்டிங் செய்த இலங்கை அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அஸலன்கா 108 ரன்களும், பதும் நிஷான்கா 41 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக தன்சிம் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் மற்றும் சரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாண்டோ 90 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 41.1 ஓவரில் இலக்கை எட்டிய வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இலங்கை அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய வங்கதேச அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசன், ஆங்கிலோ மேத்யூஸ் விக்கெட் குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து ஷாகிப் அல் ஹசன் பேசுகையில், “டாஸ் வென்ற போது, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய நான் யோசிக்கவே இல்லை. நாங்கள் இங்கு அதிகமான பயிற்சிகள் எடுத்துள்ளோம். மேத்யூஸிற்கு டைம் அவுட் கேட்டது சரியா தவறா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, அதுவும் தேவையற்றது. எனது அணியின் வெற்றியே எனக்கு முக்கியம். எனது சக வீரர் ஒருவர் வந்து தான் அவுட்டிற்கு அப்பீல் செய்ய சொன்னார், நான் அப்பீல் செய்தேன், சீரியஸாக தான் அப்பீல் செய்கிறீர்களா என அம்பயர்களும் என்னிடம் கேட்டனர். ஆனால் ரூல்ஸ்படி நடப்பதில் எந்த தவறும் இல்லை. போரில் இருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுப்பதே அவசியம். நாங்கள் மேத்யூஸிற்கு அவுட் கேட்டது குறித்து அதிகமான விவாதங்களும், விமர்சனங்களும் எழும் என்பது எனக்கும் தெரியும், ஆனால் இது தான் ரூல்ஸ் என்பதை யாரும் மறக்க கூடாது” என்று தெரிவித்தார்.