2019 உலகக் கோப்பைப் போட்டி நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
இந்நிலையில் உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
ஐசிசி அணி
- ஜேசன் ராய் (இங்கிலாந்து)
- ரோஹித் சர்மா (இந்தியா)
- கேன் வில்லியம்சன் (கேப்டன், நியூஸிலாந்து)
- ஜோ ரூட் (இங்கிலாந்து)
- ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
- பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
- அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா)
- மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
- ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
- ஃபெர்குசன் (நியூஸிலாந்து)
- பும்ரா (இந்தியா)
2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி பரபரப்புகளுக்கு மட்டும் பஞ்சமில்லாது, பல சர்ச்சைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐசிசி விதியின் காரணமாகவே இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது என கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சாமானியர்களின் கருத்தாகவும் ஆழமாகப் பதிவாகி வருகிறது.
இது கிரிக்கெட் வீரர்களிடம் கூட பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. கிரிக்கெட் உலகக் கோப்பை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது போன்ற கேலி, கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை.
இதுகுறித்து போட்டி முடிந்த பின்னர் வெற்றிக் கேப்டன் இயன் மோர்கன் கூறுகையில், அந்த ரன்-அவுட் தருணத்தின் போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணரவில்லை. அதனால் கொண்டாடவும் இல்லை.
ஏனென்றால் அந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையும் என்பது எனக்கு தெரியும் என்றார். போட்டியின் போது ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. இந்த தோல்வியை ஏற்பதில் எங்களுக்கு சற்று சிரமம் இருந்தாலும், வேறு வழியில்லை, எனவே இதை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதில் விதியை குறை கூற விரும்பவில்லை. சில முக்கிய தருணங்களை சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டோம் என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.