இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதற்காக இன்று ரீ எண்ட்ரீ கொடுக்கும் முக்கிய வீரர்
காயம் காரணமாக கடந்த சில போட்டிகள் விளையாடாத இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜேசன் ராய், இந்திய அணியுடனான இன்றைய போட்டியில் விளையாடுவார் என இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி மட்டுமே இதுவரை தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ஒரு வெற்றி இருந்தால் அரையிறுதிக்கு போதுமானதாக இருக்கும்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டம், அடுத்து வரும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
இந்த இரு ஆட்டத்தில் ஒன்றில் இங்கிலாந்து தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் அதன்நிலைமை திரிசங்கு நிலையாகிவிடும். ஆதலால், வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன அதில், இங்கிலாந்து 3 முறையும், இந்திய அணி 3 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளில் இந்திய அணி மட்டும்தான் இதுவரை தோல்வியே சந்திக்காமல் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு இக்கட்டான போட்டியான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாதாத ஜேசன் ராய் இன்றைய போட்டியில் விளையாடுவார் என இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இயான் மோர்கன், ஜேசன் ராய் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க தீவிரமாக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான இன்றைய போட்டி இன்று மாலை 3 மணியளவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.