“இந்திய அணி தான் உலகக் கோப்பையை வெல்லப் போகிறது. இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ஆணித்தனமாக கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாகவே உலக கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளின் பட்டியலில் முதலாவது அணியாக இருந்தது இந்தியா. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இருந்தன.
அதற்கு ஏற்றார் போலவே, இதுவரை எந்த அணிகளிடமும் தோற்காத ஒரே அணியாக இந்தியா உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இதுவரை ஆடிய ஆறு லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டி மழையின் காரணமாக ரத்து ஆனது. இதனால் 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது.
இந்திய அணிக்காக பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்து அபாரமாக வழி நடத்திச் செல்கிறார். ரோஹித் சர்மா 2 சதங்கள் அடித்து பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு வித்திட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்குக் காரணமாக இருந்த துவக்க வீரர் தவான் கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகினார். இதனால், நான்காவதாக ஆடிவந்த கேஎல் ராகுல் தற்போது துவக்க வீரராக களமிறங்கி சற்று ஆறுதல் தரும் விதமாக ஆடி வருகிறார்.
பந்துவீச்சில் முகமது சமி தொடர்ந்து இரு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். மறுமுனையில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான பும்ரா ரன்களை கட்டுப்படுத்தி சரியான நேரங்களில் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிர் அணிக்கு நெருக்கடியை தந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசுகையில் காயமடைந்த புவனேஸ்வர் குமார் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குள் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சு ஒருபுறமிருக்க, சுழல் பந்து வீச்சில் சஹால் மற்றும் குல்திப் ஜோடி வழக்கம் போல தங்களது மாயாஜாலத்தை நிகழ்த்தி வருகிறது.
இந்திய அணியின் இப்படி அபாரமான செயல்பாட்டை கண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டி ஒன்றில், அடித்துச் சொல்கிறேன்.. இந்த உலகக் கோப்பையை வெல்லப் போவது இந்திய அணி தான். அணி வீரர்களின் நடுவே மகிழ்ச்சியான மனநிலை இருந்து வருகிறது. இது அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதே நிலை தொடர்ந்தால் ஜூலை 14ம் தேதி வரை இந்திய அணியை வீழ்த்த எந்த ஒரு அணியாலும் முடியாது.
நடு வரிசையில் விஜய் சங்கர் சற்று தடுமாறி வருகிறார். அவர் நன்கு திறமையான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், குறைவான அனுபவத்தினால் தடுமாறுகிறார். ஒரிரு போட்டிகளில் ரிஷப் பண்ட்டை பயன்படுத்தி பார்ப்பது சரியான ஒன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம் என்றார்.