தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்று எனக்கு தோன்றவில்லை. சேப்பாக்கத்தில் ரசிகர்கள் செய்த செயலால் கட்டாயம் அவர் ஓய்வு பெற மாட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.
தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிப்பார்கள். பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1 இல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.
சிஎஸ்கே அணி கடைசி லீக் போட்டியை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடுகிறது. இந்த சீசனின் கடைசி ஹோம் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. துரதிஷ்டவசமாக இதில் தோல்வியை தழுவியது.
போட்டி முடிந்த பிறகு தோனி உட்பட, அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு மைதானத்தை சுற்றி வளம் சென்றனர். அப்போது கவனிக்க கூடிய விஷயமாக இருந்தது, லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் ஓடிவந்து அவரது சட்டை மேல் தோனியின் கையெழுத்தை பெற்றுக் கொண்டார். இது இணையத்திலும் டிரெண்ட் ஆனது. இன்னும் பல சுவாரசியமான விஷயங்களும் நடந்தது.
அந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருந்தார். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என கருத்தை முன்வைத்திருக்கிறார். கெவின் பீட்டர்சன் கூறியதாவது:
“தோனி உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் வளம் வந்தபோது நான் அங்கே இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட ஆதரவு தோனிக்கு இருக்கும்பொழுது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை.
இந்த வருடம் புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, தோனி அடுத்த வருடமும் ஆடலாம். பேட்டிங்கில் 7ஆவது 8ஆவது இடத்தில் இறங்குவதால், அதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் 20 ஓவர்கள் முழுமையாக அவரால் கீப்பிங் செய்ய முடியும். களத்தில் நின்று கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னரே காலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொண்டு இந்த வருடம் போலவே கடைசி கட்டத்திலும் பேட்டிங் இறங்கலாம். ஆகையால் தோனி ஓய்வு பெறுவது சரியாக இருக்காது. ரசிகர்களுக்காக அடுத்த வருடமும் வரவேண்டும். வருவார் என நினைக்கிறேன்.” என்று கருத்து தெரிவித்தார் கெவின் பீட்டர்சன்.