நாங்க விளையாடிய பழைய மும்பை இந்தியன்ஸ் இப்ப இல்ல… சுத்த வேஸ்ட்; மும்பை இந்தியன்ஸ் அணியை வச்சு செய்த முன்னாள் வீரர்
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்ற பெரிமைக்குரிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடியது.
கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு குஜராத் அணிக்கு ஒரு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவை இந்த முறை குஜராத்திடம் இருந்து ட்ரேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பல தோல்விகளை சந்தித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த தொடரை விட நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்து முதல் அணியாக ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.
14 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டு நடப்பு தொடரை மிக மோசமாக நிறைவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகள் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங்கும், மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “மாற்றம் தேவை என்பதற்காகவே மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தது. இது மிகப்பெரிய மாற்றம், ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மாற்றம் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதே உண்மை. மும்பை இந்தியன்ஸ் அணி ஆக்ரோஷமான, பயம் இல்லாத விளையாட்டிற்கு பெயர் போனது ஆனால் இந்த முறை அனைத்துமே தலைகீழாக இருந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு வருடமும் வெற்றி பெற்றால் தான் சிறந்த அணி என்று நான் கூறவில்லை, ஆனால் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய விதத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பேட்டிங்,பீல்டிங், பந்துவீச்சு என எதிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக செயல்படவில்லை. இது நாங்கள் விளையாடிய காலத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் இல்லை, நாங்கள் விட்டுவந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் இல்லை. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வீரர்கள் மத்தியில் ஒற்றுமையே இல்லை, இது முதல் இரண்டு போட்டிகளிலேயே கண் கூடாக தெரிந்தது. யாரும் யார் சொல்வதையும் கேட்க தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இந்த முறை 10 அணிகள் விளையாடியததால் தான் மும்பை இந்தியன்ஸிற்கு 10வது இடம் கிடைத்தது, இன்னும் கூடுதலாக ஓரிரு அணிகள் விளையாடியிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசி இடம் தான் கிடைத்திருக்கும். அடுத்த தொடரிலாவது மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.