நீங்கள் விளையாடும் விதம் சரியில்லை இதே நிலை தொடர்ந்தால் விரைவில் வெளியேற்றப்படுவீர்கள் என புஜாராவை முன்னாள் தேர்வுக் குழு அதிகாரி சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற்றது. பேட்டிங்கை பொருத்தவரை, இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவர் மட்டுமே திருப்தி அளிக்கும் விதமாக விளையாடினர். கேப்டன் விராட் கோலி, புஜாரா உட்பட முன்னணி வீரர்கள் சிலர் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரியான பந்தில் ஆட்டம் இழந்தார். மேலும் நட்சத்திர வீரர் புஜாரா முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சிலும் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவர் இரண்டாவது இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காத போது, லுங்கி இங்கிடி பந்தில் ஆட்டமிழக்க தெரிந்தார். ரபாடா கேட்ச் பிடிக்க தவறினார். நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தாமல் புஜாரா மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது. எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, இந்த தொடரை இந்திய அணி வெல்லும் என்று. தென்னாப்பிரிக்க அணியை பார்க்கையில் விளையாட வேண்டுமே என்ற எண்ணத்தில் மட்டுமே விளையாடுகிறார்கள். அவர்களின் ஆட்டத்தில் வெற்றிபெறும் எண்ணம் இல்லை. அதனால் இந்திய அணிக்கு சாதகமாக தெரிகிறது.
இந்திய அணியின் பேட்டிங் பொருத்தவரை, விராட்கோலியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் விளையாடிய விதம் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் புஜாராவின் பேட்டிங் பற்றி நான் கூறியாக வேண்டும். மோசமாக விளையாடி வருகிறார். இது அவரது ஆட்டமே இல்லை. மூத்த வீரர் ஒருவர் இப்படி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் இடத்தை நிரப்புவதற்கு நிறைய வீரர்கள் இருக்கின்றனர். அதனை உணர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். இல்லை எனில், நிச்சயம் வெளியில் அமர்த்தப்படுவார். அதன்பின்னர் தொடர்களிலும் இடம்பெறுவது சந்தேகம்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.